உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான தகுதிகாண் போட்டியின் சுப்பர் சிக்ஸ் சுற்றில் முதலிரு இடங்களைப் பிடித்த மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் அடுத்த வருடம் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான தகுதியை பெற்றுக்கொண்டன. ஸிம்பாப்வே மற்றும் ஸ்கொட்லாந்து அணிகள் துரதிர்ஷ்டவசமாக உலகக் கிண்ணத்துக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தன.
10 நாடுகள் பங்கேற்கும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான தகுதிகாண் போட்டிகள் ஸிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்றன. ஒரு குழுவில் தலா 5 அணிகள் வீதமாக ஏ,பீ என இரு குழுக்களும் லீக் சுற்றில் பங்கேற்றன. இதில், இரு குழுக்களிலிருந்தும் முதல் 3 இடங்களை பெறும் அணிகள் இரண்டாவது சுற்றான சுப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறும்.
இதன்படி மேற்கிந்தியத்
தீவுகள், அயர்லாந்து, ஐக்கிய அரபு இராச்சியம் ஆகியன ஏ குழுவிலிருந்தும் ஸிம்பாப்வே, ஸ்கொட்லாந்து, ஆப்கானிஸ்தான் பீ குழுவிலிருந்தும் சுப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறின.
ஸிம்பாப்வே, ஸ்கொட்லாந்து பரிதாபம்
மேற்கிந்தியத் தீவுகளுடனான போட்டியில் வெற்றி பெறக்கூடிய நிலையில் ஸ்கொட்லாந்து காணப்பட்டாலும் டக்வேர்த் லூயிஸ் விதிமுறைப்படி அப்போட்டியில் 5 ஓட்டங்களால் ஸ்கொட்லாந்து அணி தோல்வியடைந்து வெளியேறியது.
ஐக்கிய அரபு இராச்சியத்துடனான போட்டியில் சொந்த மண்ணில் விளையாடி ஸிம்பாப்வே வெற்றி பெற்று உலகக் கிண்ணத்துக்கு தகுதி பெறும் என பலராலும் எதிர்பார்க்கப்பட்ட போதிலும், அவ்வணியுடன் அதிர்ச்சிகரமான தோல்வியடைந்தது.
சந்தர்ப்பத்தை பயன்படுத்திய ஆப்கான்
இந்தத் தோல்விகளுக்காக காத்திருந்த அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் கடந்த வெள்ளியன்று சந்தித்தன. இதில் பங்கேற்ற இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக விளையாடியிருந்தன. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 207 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஆப்கான் கடுமையான போராட்டத்தின் மத்தியில் 49.1 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்து 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டி உலகக் கிண்ணத்துக்கு தகுதி பெற்றது.
இறுதிப்போட்டி
மேற்கிந்தியத் தீவுகளுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான இறுதிப்போட்டி இன்று இலங்கை நேரப்படி பிற்பகல் 1 மணிக்கு ஆரம்பமாகும்.