Our Feeds

Saturday, March 24, 2018

jazeem

அவுஸ்திரேலியாவில் கரையொதுங்கிய சுமார் 150 திமிங்கலங்கள் பரிதாபமாக உயிரிழப்பு...!



அவுஸ்திரேலியாவில் கரை ஒதுங்கிய சுமார் 150 திமிங்கலங்கள் மோசமான வானிலை காரணமாக பரிதாபமாக உயிரிழந்துள்ளன.

அவுஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள ஹேம்லின் பே கடற்கரையில் ஏராளமான திமிங்கலங்கள் கடந்த 22 ஆம் திகதி இரவு கரையொதுங்கியுள்ளன.

மறுநாள் காலையில் இதனைக் கவனித்த உள்ளூர் மீனவர் ஒருவர், இதுபற்றி வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதையடுத்து அங்கு அதிகாரிகளுடன் வனவிலங்கு பாதுகாப்புப் படையினர், தன்னார்வலர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் விரைந்து சென்றுள்ளனர்.

இதன்போது, சுமார் 150 திமிங்கலங்கள் கரை ஒதுங்கி, உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தன. அவற்றைக் காப்பாற்றி மீண்டும் ஆழ்கடலுக்குள் அனுப்ப தீவிரமாக முயற்சிகள் மேற்கொண்டனர்.

ஆனால், பாறைகள் அதிகம் கொண்ட அந்த கடற்கரையில் இருந்து அதிக எடை கொண்ட திமிங்கலங்களை ஆழ்கடல் பகுதிக்கு கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டது.

நேரம் செல்லச்செல்ல திமிங்கலங்கள் ஒவ்வொன்றாக உயிரிழக்க ஆரம்பித்தன. மோசமான வானிலை காரணமாக நேற்று இரவுக்குள் பெரும்பாலான திமிங்கலங்கள் இறந்துவிட்டன.

6 திமிங்கலங்கள் மட்டுமே உயிர்பிழைத்தன. பாறை மிகுந்த கடற்கரை, சுற்றிலும் உயிரிழந்த திமிங்கலங்கள், மோசமான கடல்அலைகளுக்கு மத்தியில் உயிர் பிழைத்த திமிங்கலங்களை கடுமையான முயற்சிக்குப் பிறகு கடலுக்குள் அனுப்பி வைத்துள்ளனர்.

ஒரே இரவில் அதிகளவு திமிங்கலங்கள் கரை ஒதுங்கியதால், அவை துரதிர்ஷ்டவசமாக பிழைக்கவில்லை என பூங்காக்கள் மற்றும் வனவிலங்குகள் சேவை செய்தித் தொடர்பாளர் ஜெரெமி சிக் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் இதுபோன்று அடிக்கடி திமிங்கலங்கள் கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்குகின்றன. உடல்நிலை சரியில்லை என்றாலோ, காயமடைந்தாலோ அல்லது தவறான வழியில் சென்றாலோதான் இப்படி கரை ஒதுங்கும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »